Friday, 16 December 2022

அவதார் 2 - பார்வை

இது திரைப்பட விமர்சனம் அல்ல.. ஒரு அனுபவ பகிர்வு அவ்வளவே..

முதல் முதலில் அவதார் முதல் பாகம் பார்க்கும் போது தோன்றியது இதுதான்.. இப்படி ஒரு உலகம் இப்படியும் சில மனிதர்கள் எப்படிபட்ட கற்பனை இது.. ஒரு மனித சிந்தனை எந்த அளவுக்கு ஒரு உலகத்தை உருவாக்கி அதற்குள் தன்னைப்போலவே பிறரையும் கடத்தி, லைக்கவைத்து, ஒரு புது அனுபவத்தை கொடுக்க செய்கிறது என்று வியந்து போனேன், நான் மட்டுமல்ல உலகின் பல மாந்தர்களின் வியப்பும் அதுவாகத்தான் இருந்திருக்கும் என்று நினைக்கிறேன்.

அதுமட்டும் தான் அந்த படம் சொன்னதா என்றால் இல்லை, என்னளவில் நான் உணர்ந்தது, இந்த மனிதன் இந்த இனம் சுயநலம் பிடித்தது, அனைத்தையும் தனக்கென்று எடுத்துக்கொண்டு பிற உயரிகளின் வாழ்வியலை விழுங்குகிறது.. அது சகமனிதனாக இருந்தாலும் சரி, ஏதொரு ஒரு பிறந்தநாள் உயிரினமாக இருந்தாலும் சரி, அந்த கொடுங்கோன்மையை எதிர்த்து யாரேனும் போரிட்டால், எதிர்த்து நின்று வென்றால் மனிதன் என்ன ஆவான் என்பதாய் எனக்கு அந்த படம் அமைந்தது..

இந்த இரண்டாம் பாகமும் கிட்டத்தட்ட அதே கதைக்கலம் தான், ஆனால் இதில் மனிதனின் வன்மம் தீர்க்கும் உணர்வு குடும்பம் என்று பல உணர்ச்சிகளை கடத்த முயன்றிருக்கிறது, ஆனால் அந்த முயற்சி வெற்றி அடைந்ததா என்ற கேள்விக்கு பதில் இல்லை என்பது தான், 3 மணிநேரம் வேறு ஒரு உலகம், நாம் அறியாத உயிரினங்கள் கற்பனையின் உச்சத்தில் வாழ்ந்து திரும்பும் ஒரு அனுபவம், அதை தவிர வேறு என்ன இருக்கிறது இதில் என்று கொஞ்சம் அழுத்தி சிந்தித்தால், மனிதனில் இருந்து நாவியாக மாறிய ஜாக்கெயின் மன நிலை, தன்னை நம்பி இருந்த கூட்டத்தை கைவிட்டுவிட்டு தப்பி தன் குடும்பத்தை மட்டும் காக்க எடுக்கும் முயற்சி, அதற்காக இன்னொரு இனத்தை சிக்கலில் சிக்க வைப்பது என்பது போன்ற கதை அமைப்பு, சென்ற பாகத்தில் ஜாக்கெயின் மீது ஏற்பட்ட நம்பிக்கையை இந்த பாகம் உடைத்துவிட்டது..

நேத்ரி ஒரு கணவனுக்கு அடங்கிய மனைவியாய், தன் சொந்த இனத்தை விட்டு செல்லும் குற்றவுணர்ச்சி என்று தென்பட்டாலும், இறுதி காட்சிகளில் அம்மாவாய் மாறி எதிரிகளை வேட்டையாடும் காட்சி அற்புதமாய் இருக்கிறது.. ஆனாலும் அவள் ஒரு பெண் இப்படிதான் இருக்க வேண்டும் என்று இங்கும் ஒரு வரைமுறை புகுதி அவளது முடிவுகளை அவன் சார்ந்து இருப்பது போலவே சித்தரிப்பது என்பது நேத்ரி போன்ற ஒரு ஆளுமை மிக்க போராளிக்கு கொஞ்சமும் ஓட்டவில்லை என்றே தோன்றுகிறது..

கடல் உயிரினங்கள் மேல் கடல் வாழ் நாவிகள் கொண்டுள்ள பாசம் அழகு, oru காட்சியில் தூக்கன்ஸ் உடன் அந்த இனகுழு தலைவி நடத்தும் பேச்சுவார்த்தை ரசனை மிக்கது, அதன் மரணத்தின் போது அவள் பேசும் உணர்வுகள் அழகானது, ஆனால் இது இன்னும் ஆழமாய், சொல்லபடாமல், அந்த உலகத்தின் காட்சி அமைப்பிலே பெரும்பாலும் நேரம் செலவிட்டது தான் கொஞ்சம் அயற்சியை கொடுத்துவிட்டது..

சக உயிரை நேசி என்பது தான் இந்த பாகமும் சொல்லும் கதை என்றாலும், முதல் பாகம் அந்த கதை சொல்லும்விதத்தில் ஜெயித்தது, அந்த இடத்தில் இந்த படம் சற்றே சறுக்கிவிட்டது என்றே தோன்றுகிறது..

ஜாக் குடும்பதலைவனாக ஜெயித்தாலும், ஒரு இனத்தின் தலைவனாக தோற்றுவிட்டான்... என்ன இருந்தாலும் அவனும் மனிதன் தானே...

#NaanVijay #avatar #AvatarTheWayOfWater #experience