Sunday, 9 July 2023

மாமன்னன் பார்வை

குறிப்பு : திரைக்கு பின் எந்த அரசியல்வாதி வரலாறு என்பதையெல்லாம் ஒதுக்கிவிட்டு ஒரு திரைப்படமாக மட்டும் பார்த்தபோது நான் உணர்ந்தவையை பகிர்ந்துக்கொள்கிறேன், இந்த விலக்கலில் தேவர் மகன் பஞ்சாயத்தும் அடங்கும்..

முதலில் இந்த திரைப்படத்தை இரண்டுவிதமாக அணுகலாம் ஒன்று, மாரிசெல்வராஜ் நேரடியாக பேசிய அல்லது உணரவைக்க முயற்சித்த சாதிய குறியீடுகள் உள்ள திரைப்படமாக, இன்னொன்று ஒரு மகனுக்கும் தந்தைக்கும் இடைப்பட்ட படமாக...

தான் ஒரு வலியை அனுபவிக்கும் போது அதை மகன் தந்தையிடம் சொல்கிறான், அந்த நேரத்தில் தந்தை சிலமுயற்சிகள் எடுக்கிறார் ஆனாலும் அது சாத்தியப்படவில்லை, இதனால் அந்த உறவு முறிகிறது, சில காலத்திற்கு பின்பு அதே போல ஒரு ஆசாதாரண சூழல், இம்முறை அந்த தந்தை அதை தன்னால் சரி செய்ய முடியும் என்கிற நம்பிக்கையை கொடுக்க, அந்த மகனும் வருகிறான், அங்கு அவர் முயல்கிறார் ஒருவேளை அவர் அதை சரிசெய்திருக்க கூடும், ஆனால் அங்கு மகன் தந்தையின் சுயமரியாதை இழந்த ஒரு நிலையை காண அதை மீட்டு தர வருகிறான், போராடுகிறான் அதில் ஜெயித்தானா இல்லையா என்பதே மீதி கதை..

இன்னொரு பக்கம், காலம் காலமாய் அடிபட்டு அடிமையாக்கப்பட்ட ஒரு சமூகம் மேல வர அவர்கள் குரல், சட்டம் இயற்றப்படும் அரங்கில் ஒலிக்கப்பட வேண்டும் என்னும் உன்னத நோக்கோடு அம்பேத்கர் போன்ற பெரும் தலைவர்கள் போராடி தனி தொகுதி என்னும் அமைப்பை தேர்தலில் கொண்டுவருகின்றனர், அது எந்த அளவுக்கு அந்த தலைவர்கள் நினைத்தது போல வலிமையாக செயல்படுகிறது என்பதை தான் இந்த திரைப்படம் கேள்விக்குட்படுத்துகிறது,

Spoiler alert (ஒருவேளை இன்னும் படம் பாக்கலைன்னா)

தான் ஒரு MLA என்ற உணர்வு அந்த MLA வுக்கு இருக்கிறதா என்றால் இல்லை ஏன் இல்லை, ஏனெனில் அவர் ஒரு தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்தவர், அவர் அதை இன்னொரு சமூகம் அதை தனக்கு கொடுத்ததாக அதற்கு அவர் நன்றிகடன்பட்டவறாக உணர்கிறார், அந்த உணர்ச்சியை தான், இந்த பதவி என் உரிமைனு தெரியாம அவங்க கொடுத்த பிச்சைனு நெனச்சிட்டேப்பா என்று வடிவேல் பேசும் வசனம் காட்டுகிறது,

நிஜத்தில் இப்படிதானா என்றால் அது அந்த அந்த சட்டமன்ற உறுப்பினர்களுக்கே வெளிச்சம், ஒரு சட்டமன்ற உறுப்பினராக இருந்தும், அந்த வீட்டிற்க்குள் அவர் உட்காரமாட்டார் அது பழக்கம் என்று சொல்லும் போது, அது என் சுயமரியாதை இழப்பு என்பதை மகன் தந்தைக்கு புரியவைக்கும் அந்த பகுதி கிளாஸ் ரகம், பல வசனங்கள் காட்சிகள் என்று தான் கொட்ட வேண்டிய மொத்த அரசியலை பேசி பேசி தீர்த்திருக்கிறார் மாரி என்றே சொல்லவேண்டும்..

உன்னை உட்காரக்கூடாதுனு சொன்னவன், நாளைக்கு நீ கை காட்டி உட்கார்னு சொன்னாதான் உட்காரணுங்குற அளவுக்கு உயர்ந்து காட்டு என்பது இந்த கதையோட one line சொல்லலாம்..

படமாக எப்புடி இருக்கு?

மூன்று பேர் இந்த படத்தை தோலில் சுமக்கிறார்கள் என்று சொன்னால் சரியாக இருக்கும், முதலில் வடிவேலு, ஒவ்வொரு காட்சியிலும் மின்னுகிறார், அதிலும் தன் மகன் அடிபட்டு கிடக்க நியாயம் கேட்டு நிற்கும் தந்தையாக, தனது வலி, இயலாமை, கோபம் என்று ஒரே காட்சியில் கலந்துகட்டி எப்படி பட்ட நடிகன் ப்பா அப்படினு கண்டிப்பா சொல்ல வெச்சுடுவாரு... அப்பா உட்காருப்பானு சொல்லும் போதும் உட்கார்ந்த பின்னும் ஏதோ தப்பு பண்ணிட்டோம்னு ஒரு வகை குற்றவுணர்ச்சியில் இருப்பது போன்ற அந்த நடிப்பு அந்த காட்சிக்கே வேற ஒரு ரகம் காட்டிடுது, ரொம்ப அமைதியா நிதானமா யோசிச்சு செயல்படுற ஒரு அரசியல்வாதியா மனதில் நிக்கிறார்,

பகத் பாசில் மனுஷனா இவங்குற அளவுக்கு performance பின்றான் மனுஷன், அவர் அண்ணனை திட்டும்போது ஒரு அதிகார தோரணை, மிக முக்கியமா உங்க அப்பா யார் சொன்னாலும் உட்காராமாட்டார் நீ உட்காருன்னு சொல்லும் போது ஒரு ஏளன சிரிப்பு, அப்புடியே cut பண்ணா பாத்தியாண்ண உட்காந்ததும் வாடா போடான்னு சொல்றங்குற transformation அதுவும் அந்த சீன்னோட மூடுக்கு எற்றாற்போல கொஞ்சம் கொஞ்சமா develop பண்ணி கடைசியா துப்பாக்கி எடுக்க ஓடுற வரை மனுஷன் rule பண்றான் அந்த scene, இரண்டாம் பாதியில கார்ல மிரட்டுற scene, சங்கத்துக்காரங்க கால்ல விழுற scene இப்படி ஒவ்வொண்ணும் நான் யாருனு காட்ரன் பாருங்கடா ரகம்,

அடுத்து கண்டிப்பா ARR மனுஷன் BGM ல சக்கப்போடு போட்டுருக்காரு, படம் ஆரம்பிக்கும் போதே வடிவேலுவோட வாய்ஸ் background கொண்டுவந்து அந்த மனுஷன் இந்த படத்துல சீரியஸ் தான் பாக்கணும்னு ஒரு mindset கொண்டுவந்துடுறாரு, அதே டோன்ல வடிவேலு பாக்குறதால ஆரம்பிக்கும் போதே வடிவேல் கூட நாம ஈஸியா ஒன்றிக்க முடியுது, கிணத்து காட்சி மியூசிக்ல ஒரு elevation கொடுத்து ஏற்கனவே பயங்கர intense இருக்க scene இன்னும் கொடூரமா மாத்திடுறாரு, பாட்டு எல்லாமே பட்டைய கிளப்புது, ஒண்டிவீரன் பாட்டு சிங்கப்பெண்ணேக்கு மேல கொண்டாட படவேண்டிய பாட்டு, நெஞ்சமே நெஞ்சமே ஒரு 90s feel போட்டு தாக்கிட்டான் மனுஷன், வடிவேல் பாடுன பாட்டு கேட்கும்போது இருந்த impression காட்சியா பாக்கும் போது பெருசா எடுப்படலை மற்றபடி மாஸ்டர் அவரு வேலைய வேற level பண்ணி இருக்காரு..

கீர்த்திக்கு பெருசா நடிக்க ஒன்னும் இல்ல படத்துல, படம் முழுக்க உதயநிதி இருந்தாலும், வடிவேல், பகத் ரெண்டுபேரும் அந்த பக்கம் திரும்ப விடாம நம்மள பாத்துக்குறாங்க, அவங்க ரெண்டுபேரும் இருக்கும் போது இவர் நடிப்பு பெருசா எடுப்படலை, ஆனாலும் ரொம்பவே மேனக்கெட்டு சில காட்சிகளெல்லாம் நடித்திருக்கிறார், குறிப்பாக, அப்பாவை உட்கார சொல்லும் காட்சியில் அவர் யார் சொன்னாலும் உட்காரமாட்டாறான்னு ஒரு மூட் elevation கொடுக்கும் போது அங்க இருந்து பகத் அந்த scene அவர் பக்கம் திருப்பிடுறார்..

அடுத்து முழுபடமாக முதல் பாதி கொடுத்த வலியை பாதிப்பை இரண்டாம் பாதி கொடுக்கவில்லை, அது ஏதோ ரெகுலர் cat and mouse போட்டி கதையா மாறிடுச்சு, அந்த intense ரொம்பவே ரெண்டாம் பாதில missing, அது மட்டும் இருந்திருந்தா இது ஒரு வேற level படம், ஆனால் overall ரொம்ப நல்ல மேக்கிங், அருமையான காட்சி அமைப்பு

குறியீடுகள் அநியாயத்துக்கும் போட்டு வெச்சுருக்காரு மனுஷன், அய்யா எங்களுக்கு அவ்வளவு அறிவேல்லாம் இல்லைங்க எத சொல்றதா இருந்தாலும் நேராவே சொல்லிடுங்க, அதை புரிஞ்சு படத்தை follow பண்றதுக்குள்ள அடுத்த show போட்டாங்க.. கொஞ்சம் அடுத்தவாட்டி பாத்து பண்ணுங்க... அப்புறம் உதயன்னா ஏன் பன்னிங்களா செத்துப்போற சீன்ல உள்ள போனதும் சிரிச்சாருன்னு தான் இப்போவரைக்கும் புரியல... அதை அழுகைனு மட்டும் சொல்லி கொலவெறி ஆக்கிடாதீங்க சொல்லிட்டேன்...

நான் விஜய் 

Saturday, 8 July 2023

அமெரிக்காவின் தோள்சீலை போராட்டம்

சில நாட்களுக்கு முன்பு ஒரு செய்தி தமிழ் ஊடகங்கள் இணையத்தில் வெளியிடுகின்றன, அந்த செய்தியின் சாரம் மற்றும் பின்னணியை அறிய google உதவியை நாடியப்போது அதுக்கொடுத்த பின்னணி தகவல்கள்..

அமெரிக்காவில் பல மாகனங்களில் பெண்கள் மேல் ஆடை இல்லாமல் சூரிய குளியல் எடுக்க தடைவிதிக்கபட்டிருக்கிறது, இதை எதிர்த்து maryland என்னும் மாகனத்தில் ஒரு வழக்கு தொடரப்படுகிறது, அதில் ஒரு குழுவை சேர்ந்த பெண்கள் எங்களுக்கு மேலாடை இல்லாமல் கடற்கரையில் குளிக்கும் உரிமை வேண்டும் என்ற கோரிக்கை முன்வைக்கபடுகிறது, ஆனால் நீதிமன்றம் அந்த வழக்கை தள்ளுபடி செய்து அங்கு மேல்முறையீடு செய்யவும் அனுமதிக்கவில்லை.

இதன்பின் அந்த பெண்கள் குழு வேறு வழியின்றி அமெரிக்காவின் உச்ச நீதிமன்றத்திற்கு இந்த வழக்கை கொண்டு செல்கிறது, அங்கிருக்கும் நீதிபதிகள், maryland நீதிமன்றம் நடந்த விதம் வருத்தமளிப்பதாக தெரிவித்து, இதை மறுவிசாரணைக்கு அனுமதிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறது, ஆனால் அதற்கு நீதிமன்ற தரப்பு இது கலாச்சாரத்துக்கும், பெண்கள் பாதுகாப்பிற்கும் எதிரானது என்று சொல்லி மறுக்க, வழக்கை உச்ச நீதிமன்றமே கையில் எடுத்து விசாரணையில் இறங்குகிறது, அப்போது தான் அமெரிக்காவின் பிற மாகான பெண்களும் தங்களுக்கும் உரிமை வேண்டும் என்று சொல்லி போராட்டத்தில் இறங்குகின்றனர்,

அமெரிக்காவின் ஒரு மிகப்பெரும் தெருவில் பெண்கள் மேலாடை இல்லாமல், நிறங்களால் வரைந்துகொண்டு ஒரு பெரிய பேரணியையும் நடத்துகின்றனர், இதன் விளைவால் சில மாகானங்கள் அந்த இடத்தில் பெண்களுக்கு அந்த உரிமை வழங்க முன்வருகின்றனர், இதை தங்கள் வெற்றியாய் நினைத்து அமெரிக்க பெண்கள் கொண்டாடுகின்றனர்,

இதில் வழக்கீல் முக்கியாமாக வைக்கப்பட்ட வாதம், அமெரிக்கா இன்று ஒரு முன்னுதாரணமான நாடு, செல்வசெழிப்பில் வளர்ந்த நாடு, சமஉரிமை பேசும் நாடு, ஆனாலும் அது பெண்களுக்கு மட்டும் பாகுபாடு காட்டுகிறது, அதாவது ஒரு ஆணுக்கு கடற்கரையில் மேலாடை இல்லாமல் சுற்றும் உரிமை இருக்கிறது ஆனால் அது பெண்களுக்கு இல்லை, காரணம் கலாச்சாரம், பாதுகாப்பு, அப்படி எங்களை பாதுகாக்க மறைக்க வேண்டும் என்றால், எங்கள் தலைமுடி கழுத்து, தோல்பட்டை என்று அனைத்தையும் மறைத்து உட்கார வேண்டியது தான், அதுதான் இந்த நாடு எங்களுக்கு கொடுக்கும் சமஉரிமையா என்று கேள்விகள் கேட்டு திணறடித்தார், இதன் விளைவு தான் சில மாகனங்களின் இந்த முடிவு, இருந்தும் இந்த வழக்கு தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது.

இந்த வழக்கை குறித்த செய்தித்தான் தமிழ் ஊடகங்கள் வெளியிட, அதன் comment பகுதியில் நான் பார்த்த சில கருத்துக்கள் என்னை இன்னும் சிந்திக்க செய்தது.. அந்த கருத்துக்களில் பெரும்பாலும் சொல்லப்பட்ட ஒரு வார்த்தை தோல்சீலை போராட்டம்..

நம் நாட்டில் தோள்சீலை அணிய நாம் போராடி, நம் பெண்கள் அந்த உரிமையை பெற்றிருந்தனர், ஆனால் இந்த பெண்கள் கழட்ட உரிமை தேடுகின்றனர், இதற்கு ஒரு முற்போக்கு கூட்டம் முட்டுவேறு கொடுக்கிறது, இவர்கள் எல்லாம் என்னவகை பெண்கள் என்று அடுத்து அந்த பெண்களின் நடத்தையை குறித்து விமர்சனங்கள் வைக்க தொடங்கிவிட்டனர், இதில் ஒருவர் இந்த முற்போக்கு சிந்தனை கொண்டுதான் பல பெண்களை ஆண்கள் முற்போக்கு போர்வையில் அனுபவிக்கிறார்கள் என்று ஒரு குற்றசாட்டையும் வைக்க, அதற்கு பல ஆமாக்களும், லைக்ஸ்யும் தெறித்துகொண்டிருந்தது...

என் சிந்தையில் தோள்சீலை போராட்டமும், இந்த அமெரிக்காப்பெண்களின் topless போராட்டமும் ஒன்றாகத்தான் தெரிகிறது, நீ மறைக்க வேண்டுமா வரிகட்டு என்று சொல்லும்போது, இது என் உடல், இதில் எதை அணியவேண்டும் என்பது என் உரிமை என்று பேசி சண்டையிட்ட உயிரை கொடுத்த அந்த பெண்களின் போராட்டத்தில் எத்தனை நியாயம் இருந்ததோ, அதே நியாயம் இந்த அமெரிக்காப்பெண்களின் போராட்டத்திலும் இருப்பதாகத்தான் நான் உணர்கிறேன், எல்லா பக்கமும் வளர்ந்த ஒரு நாடு இன்னும் ஒரு பெண்ணின் உடையில் அதை நியமிக்கும் அதிகாரத்தை தன்கையில் வைத்திருக்க முயற்சிக்கிறது என்றால், இன்னும் அது பெண்களை சரியாக மதிக்கவில்லை என்பதே அந்த நாட்டின் சட்டத்தில் எனக்கு ஏற்படும் புரிதல்,

முற்போக்குவாதிகள் என்ற போர்வையில் பெண்களை ஏமாற்றும் கூட்டம் என்று சொல்பவர்கள் பிரச்னை ஒன்று மட்டும்தான், இந்த முற்போக்கு சிந்தனையால் இன்று பெண்கள் அவர்களுக்கான உரிமைகளை பேச தொடங்கிவிட்டனர், தாங்கள் எப்படி நடத்தபட வேண்டும் என்பதை இன்று அவர்களே முடிவு செய்கின்றனர், இதை பொறுத்துக்கொள்ள முடியாத கூட்டம் எப்போதும் போல் தங்களுக்கு தெரிந்த பெண்களை போக பொருளாக பார்க்கும் அந்த மனோ நிலையை அவர்கள் காமத்திற்காக இப்படி சுதந்திரம் பேசுகின்றனர் என்று திசை திருப்பிவிடுகின்றனர்,

என்னை பொறுத்த வரையில் தோள்சீலை போராட்டம் எவ்வளவு முக்கியமோ அதே அளவுக்கு பெண்களுக்கு இந்த topless போராட்டமும் முக்கியம்.. அது அவர்கள் உடல், அவர்கள் உடை அவர்கள் முடிவு செய்துகொள்ளட்டும், நாம் மூடிக்கொண்டு வேடிக்கை பார்ப்போம், அவர்கள் வெற்றியை கொண்டாடவிட்டாலும், அதற்கு வேறு சாயல் பூசும் கோழைதனத்தை காட்டாமல் இருங்கள் போதும்...

நான் விஜய்