#NaanVijay
நான் விஜய்
இம்ப்ரெவாய்ஸ் என்ற சொல்லாடல் சமீப காலத்தில் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் அதிகம் கேட்டிருக்க வாய்ப்புண்டு, ஆனால் இது இலக்கிய உலகில் பலகாலமாக நடந்து கொண்டிருக்கிறது, ஒரு சம்பவதையோ, அல்லது ஏற்கனவே எழுதப்பட்ட ஒரு நாவலையோ, கவிதையோ எடுத்து அதில் ஒருபகுதியையோ அல்லது அதன் ஒரு குறிப்பிட்ட மனிதரின் வாழ்வியலையோ ஒரு தனி பதிவாக வெளியிடுவது தான் அது...
தமிழிலும் இப்படி பல நூல்கள் வந்திருகின்றன, பொன்னியின் செல்வனின் தொடர்ச்சியாக பலபேர் நாவல்களை எழுதி இருப்பதை நாம் அறிந்திருகிறோம், பாரதி கூட பெரிய மஹாபாரததின் துரோபதி துகில் உரியப்படும் நிகழ்வை மட்டும் தனியே கொண்டு பஞ்சாலி சபதம் எழுதி உள்ளார். இப்படி கையாளப்பட்ட நூல்தான் இந்த பரபாஸ்..
பரபாஸ் ஒரு ஸ்வீடேன் நாவல், எழுத்தாளர் பேர் லாகர் குவிஸ்டு என்பவரால் 1950ல் வெளியிடபட்ட நூல் இது, இதற்காக அவர் இலக்கியத்திற்கன நோபல் பரிசை 1951ல் பெற்றார், அப்படி என்ன சிறப்பு இந்த நாவலுக்கு என்று பார்க்கும் போது, முதல் செய்தியே இது பரபாஸ் பற்றியது என்பது இன்னொன்று இது விவிலியத்தின் பல கேள்விகளை சாமானியனாக கேட்கிறது.. இயேசுவின் கடவுள் தன்மையை பற்றி பேசுகிறது, இப்படி சொல்லிக்கொண்டே போகலாம்.
யார் இந்த பரபாஸ்? இயேசுவிற்கு பதில் சிலுவையில் இருந்து விடுதலை பெற்ற கொடூரமானவன், பல கொள்ளை கொலைகளை செய்தவன் என்று சில வரிகளில் விவிலியத்தில் கடந்து போனவன், அவ்வளவு தரவுகளே அவனைப்பற்றி விவிலியத்தில் உங்களுக்கு கிடைக்கும், The Passion of The Christ என்னும் அகாடமி விருது பெற்ற ஒரு ஹாலிவுட் படம், அதில் ஒரு காட்சி இந்த புத்தகத்தை படிக்கும் போது நினைவுக்கு வருகிறது, இயேசுவிற்கு பதில் மக்கள் பிளாதுவை எங்களுக்கு பரபாஷை விடுதலை செய் என்று கோசமிடுவார்கள், பரபாசும் விடுதலை அடைந்த மகிழ்ச்சியில் துள்ளிகுதித்து ஓடுவான், அப்படி ஓடும்போது இயேசுவை தாண்டும் அந்த ஒரு நொடி அவன் பார்வையில் ஒரு மாற்றம் வரும், இவரா எனக்கு விடுதலை கொடுத்தவர் என்பது போல ஒரு பார்வை வீசுவான், அந்த ஒற்றை பார்வை தான் எனக்கு இந்த மொத்த புத்தகமாக தெரிகிறது.
பரபாஸ் நாவல் இயேசுவின் இறப்பிற்கு பின் என்ன நடந்திருக்கும் என்று விவிலியம் சொல்லாத ஒரு களத்தை காட்டுகிறது, அங்கிருக்கும் சாமானியர்கள் என்ன பேசி இருப்பார்கள், அவரை கொண்டாடியவர்கள் என்ன நினைத்திருப்பார்கள், பரபாஸ் மனநிலை எப்படி இருந்திருக்கும், அவன் இதை எப்படி ஏற்றுக்கொண்டிருப்பான், இவையெல்லாம் அந்த கணத்திலே கொண்டுப்போய் நிறுத்துகிறது,
பரபாஸ் கடவுள் நம்பிக்கை கொண்டவனில்லை, ஆனால் அவன் இயேசுவை நம்பினான என்றால் இல்லை, அவன் நம்ப முயற்சி செய்து கொண்டிருந்தான், அவனுக்கு அதிசயங்கள் நடந்ததா என்றால் ஆம் நிச்சயம் நடந்தது, ஆனால் அவன் அதை அதிசயம் என்று நம்பினான என்றால் அவனுக்கு அதில் பெரிதாக நாட்டமில்லை, அவன் கடவுளை நம்பவில்லை ஆனால் இயேசுவுக்காக எதையும் செய்ய ஒருக்கட்டத்தில் தயாராகிவிட்டான், எனில் அவன் கிறிஸ்தவனா இல்லை, இன்னும் கடவுளை தேடிகொண்டிருப்பவன், கிறிஸ்தவர்களால் வெறுக்கப்பட்டவன்.
இந்த பரபாஸ் நாவல் என்பது மதில்மெல் பூனை போல, மிகவும் கவனமாக எழுதப்பட்ட ஒன்று என்றே நம்புகிறேன், ஒருவனின் கடவுள் நம்பிக்கையயை இந்த புத்தகம் கேள்விகேட்கவில்லை, அதே சமயம் எல்லாவற்றையும் உண்மையைன்று வாதிடவும் இல்லை, இது மிகுந்த சிரமமான ஒரு முயற்சி, கொஞ்சம் பிசகினாலும் உலகின் மிக பெரிய மதத்தை இழிவு செய்த பழி ஆசிரியர் தலையில் விழுந்துவிடும், அப்படி இருக்க, இத்தனை நம்ப தன்மையோடு இதை கையாண்டதை புகழ்ந்தே ஆகவேண்டும்,
பரபாஸ் தனிமையை அனுபவிக்கும் போது இந்த நாவலில் நீங்களும் அதை உணர்வீர்கள், அவன் ஒவ்வொரு உணர்ச்சிகளிலும் நீங்கள் பயணப்படுவீர்கள் அதுவே இந்த புத்தகத்தின் மிகப்பெரிய வெற்றி, அவனின் பயணம் அன்றைய இயேசுவை நமக்கு அடையாளம் காட்டுவத்தோடு, அன்றைய மத அரசியலின் வீரியத்தையும் புரியவைக்கிறது, ஒருவரை ஒருவர் நேசியுங்கள் என்பது எவ்வளவு புதிய கொள்கை அந்த காலத்திற்கு என்பதை இந்த நாவல் புரியவைக்கிறது, அன்பே பிறதானம் என்று வாழ்ந்த ஒரு மனிதனின் மரணம் இன்னொருவனை என்னலாம் செய்திருக்கிறது என்ற கற்பனை எழுத்தின் ஆதிக்கமே
தன்னைத்தான் நேசிப்பதைப்போல பிறனையும் நேசிப்போமாக, இதுவே எல்லா கட்டளைக்கும் பிரதான கட்டளையாய் இருக்கிறது
- தோழர். இயேசு
புத்தகம் : பரபாஸ்
ஆசிரியர் : பேர் லாகர் குவிஸ்டு
தமிழில் : க. நா. சு
பதிப்பகம் : பாரதி புத்தகாலயம்
பக்கங்கள் : 128
No comments:
Post a Comment