#NaanVijay
நான் விஜய்
எப்பொழுதும் கல்கியின் பித்தால் நாவல்கள் மட்டுமே படித்துகொண்டிருந்த எனக்கு ஒரு நாள் சுயமுன்னேற்ற புத்தகங்களின் மீது ஈர்ப்பு ஏற்பட்டது அதற்கு காரணம் என் பணி சூழல், அதோடு சில லைட் ஹெர்டிட் கட்டுரை புத்தகங்களையும் படிக்கும் பழக்கம் ஏற்பட்டது அதன் நீச்சியாக ஒரு Raghu Raavan அறிவுரை படி தொ. ப படிக்க ஆரம்பித்தேன், அன்றுதான் உண்மையில் நான் சரியான முறையில் புத்தகங்கள் படிக்க தொடங்கியதாய் உணர தொடங்கினேன், ஒரு சமுதாயத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம், எல்லாமும் எளிதாய் கிடைகின்ற ஒரு நாகரிகத்தில் தில்லைய்துகொண்டிருக்கிறோம், எல்லாமும் எளிதாய் நடந்துவிட்ட ஒரு வாழ்வியலை அடிப்படையாய் கொண்டிருக்கிறோம், ஆனால் இதன்பின் உள்ள அரசியல் என்ன? நாம் தொலைத்த மரபு என்ன? நான் பார்க்கும் மனிதர்களின் வாழ்க்கை எப்படிபட்டது? நான் வணங்கும் கடவுளர்கள் யார்? ஏன் ஒரு கடவுள் ஊருக்கு வெளியில் உள்ளது? ஏன் எல்லோரும் எல்லா கடவுளையும் வணங்குவதில்லை? ஏன் சில கடவுள்கள் மட்டும் கோட்டை போன்ற கோவில்களில் இருக்கின்றன? ஏன் சில கற்கள் கடவுளாக்க பட்டிருக்கிறது? நான் நம்பும் புராணத்திற்கும் இன்றைய கடவுளுக்கும் என்ன தொடர்பு? இந்த கடவுளுக்கும் என் வாழ்வியளுக்கும் என்ன தொடர்பு?
என் உணவு முறை இப்படி இருக்க காரணமென்ன? என் முந்தைய தலைமுறை என்ன உண்டிருக்கும்? அவர்களாய் விரும்பி உண்ணார்களா? அல்லது திணிக்கப்பட்டதா? இந்த உடைகள் எப்படி மாறியது? இப்படி கேள்விகள் நீள தொடங்கியது... எங்கோ நடக்கும் ஒரு கூட்டத்தில் ஒருவர் போட்ட கையெழுத்து ஒரு சமூகத்தையே மாற்றுமானால் அதன் விளைவுகள் தெரிவிக்க படுவதில்லையே ஏன்? யாருக்காக இந்த அரசியல் என்று மனம் தவிக்க தொடங்கியது அதற்க்கான பதிலை இன்றைய நாட்களில் தேடினால் எப்படி கிடைக்கும் அதன் வேரில் அறிதல் வேண்டும் அதற்கு வானமாமலை, தொ. ப, பக்தவச்சல பாரதி, அ. க பெருமாள் போன்றோர் துணை தேவைப்படுகிறது..
பண்பாட்டு அசைவு என்பது அறியப்படாதா தமிழகம் மற்றும் தெய்வங்களும் சமூக மரபுகளும் என்னும் இரண்டு புத்தகங்களின் தொகுப்பாகும், இதை மக்கள் பதிப்பாய் முயல் கூடு பதிப்பகம் 75ரூபாய்க்கு வெளியிட்டது 208 பக்கங்கள் கொண்ட மிகப்பெரிய தகவல் களஞ்சியம் இந்த விலைக்கு என்பது பாராட்டதக்க முயற்சி, நல்ல தரமான தால்களில் வெளியிட்டிருக்கின்றனர் ஆயினும் சிறிய மனவருத்தம், என் கண்ணுக்கே புலப்படும் அளவுக்கு அத்தனை எழுத்து பிழை, ஒரு பெரிய எழுத்தாளர்க்கு மரியாதை செலுத்தும் வகையில் எடுக்கப்பட்ட இந்த முயற்சியில் இது ஒரு சிறிய தவறாக கருத்த முடியவில்லை, இதை பதிப்பகத்தார் கவனத்தில் கொள்ளுதல் முக்கியமாகும்
அறியப்படாதா தமிழகம் பற்றி ஏற்கனவே என் பார்வையை தனிப்பதிவாக போட்டிருப்பதால் எஞ்சிய பகுதியான தெய்வங்களும் சமூக மரபுகளும் பற்றி என் பார்வையை இதில் முன்வைக்கிறேன்
தெய்வம் என்றால் என்ன எத்தனை வகை தெய்வம் உள்ளது, எதானல் ஒரு தெய்வம் பெரியது என்று இன்னொன்று சிறியது என்று அழைக்கப்படுகிறது அதற்கு பின் இருக்கும் இலக்கிய சான்றுகள் என்று ஒரு குழந்தைக்கு சொல்லிக்கொடுப்பது போல் ஆரம்பம் முதல் தாய் வழி மரபில் தொடங்கி இன்றைய தெய்வ வழிபாடு வரை அழகாக சொல்லி இருக்கிறார்
சிறுதெய்வங்கள் யார் இந்த சொல்லாடல் எங்கிருந்து வந்தது, யாரெல்லாம் சிறுதெய்வம், சிறுதெய்வம் யாருக்குறியது, என்னென்ன வழிபாடுகள் இருக்கின்றன, எவையெல்லாம் இன்று எஞ்சி இருக்கிறது என்பதை பற்றிய விளக்கங்கள் தெளிவு பெறவைக்கிறது
பலராமன் என்பவன் ஒரு தசவதாரம் என்றும் அதை சுற்றிய சில கதைகள் மட்டுமே தெரிந்த எனக்கு, இந்த புத்தகம் பல ஆச்சரியங்களை வைத்திருக்கிறது.. இரு வகை தொழில்கள், அவர்களை குறிப்பால் உணர்த்தும் இரண்டு கடவுள்கள், அவர்களுக்கு இந்திரன் என்னும் கடவுளோடு இருக்கும் பகை அதற்கு பின் இருக்கும் அன்றைய காலகட்ட அரசியல் என்று திணறவைக்கிறார், தாய்வழி சமூகத்திற்கும் தந்தை அதிகார சமூகமாற்றத்திற்கும் பலராமன் கதையை கொண்டு சொல்லும்போதுதான் அந்த கதையின் உண்மை அர்த்தம் புரிகிறது, கோவர்த்தன மலையை தூக்கிய கண்ணனுக்கும் இந்திரனுக்கும் உள்ள சண்டையின் உள்ளர்த்தம் இதுவரை நான் கேள்விப்படாத ஒன்று, இப்படி அநேக ஆச்சரியங்கள் இந்த அத்தியாயத்தில் வைத்திருக்கிறார்.
அழகர்கோவில் இதுவரை நான் நேரில் கண்டதில்லை, ஆனால் அதை கண்முன்னே ஒரு முப்பரிமான வடிவமாக கற்பனை செய்யும் அளவுக்கு அங்குல அங்குலமாய் விலகி இருக்கிறார், அதனுள் இருக்கும் வைணவ மத நிறுவனத்தின் அரசியலையும், அந்த அமைப்பில் இருக்கும் பல ஆகம விதி மீரல்களையும், இருந்து வைணவம் அதை கொண்டாடுவதற்க்கான காரணமும் இன்னொரு வகையான மத போட்டியை புரியவைக்கிறது, இந்த மத போட்டியில் சாமானியனின் உணர்வுகள் எப்படி கைப்பற்ற பட்டது சைவத்திற்கு எதிராக தன்னை நிறுத்திக்கொள்ள அழகர் கோவில் போன்ற நிலையங்கள் எப்படி பயன்பட்டன என்பது போன்ற தகவல்கள் இனி அந்த கோவிலை பார்க்கும் பிம்பதையே மாற்றி விடும்
கள்ளர் இனத்திற்கும் அழகருக்கும் உள்ள சம்மந்தம் என்ன? கோவிலில் உள்ள 100ம் மேற்பட்ட கல்வெட்டு ஒன்றில் கூட கள்ளழகர் என்ற சொல் இல்லாத போது வழக்கத்தில் வந்தது எப்படி? மேல்நாட்டு கள்ளரின் உடைகளுக்கும் அழகருக்கும் உள்ள ஒற்றுமை என்ன? வேறு எந்த சமூக மக்களெல்லாம் அழகரின் வழிபாடுகளுடன் தொடர்பு கொண்டுள்ளனர் ஏன்?, அழகருக்கு மட்டும் இப்படியா வேறு ஏதேனும் வைணவ தளங்களும் இப்படி முரண்பட்ட, வேதங்களை மீறின வழிபாட்டு முறைகளை கொண்டிருக்கின்றனவா? போன்ற அனைத்து கேள்விகளுக்கும் உள்ளே பதில் இருக்கிறது..
தாய்வழி சமூகத்தில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாய் முன்னேறி நில உடைமை அல்லது சொத்ததிகார சமூகத்தில் வந்திருக்கும் நாம், அந்த உரிமை அதிகாரம் கோவிலுக்குள் எப்படி போனது அங்கிருந்து அது எப்படி மீட்க பட்டது, ஏன் சிவ பெருமான் உடையார் ஆனார், ஏன் விஷ்ணு ஆழ்வார் ஆனார் இந்த பெயர்களுக்கும் உடைமை அதிகாரத்துக்கும் என்ன சம்மந்தம், நாட்டார் வழகியலில் இவைகள் ஏன் முக்கியம் பெறுகின்றன, இவைகளை பல ஆதரங்களுடன் ஒவ்வொன்றாய் விளக்குகிறார் ஆசிரியர். அதோடு உடைமைக்கும் ஒழுக்கத்திற்கும், ஒழுக்கத்திற்கும் கடவுளுக்கும், பெண்ணுக்கும் உள்ள தொடர்புகளை புரியவைக்கிறார், பரத்தையர் என்ற பிரிவு ஏன் மத நிறுவனங்களால் கொண்டுவரப்பட்டது, அதன் பின் இருக்கும் அதிகார காரணம் என்ன, என்று ஒரு பெரிய ஆய்வயை மிக எளிதாய் புரியவைக்க முயண்டிருக்கிறார்..
வைணவம் இங்கிருந்த பல சமயங்களோடு சண்டையிட்டு தன்னை எப்படி நிறுத்திகொண்டது, சைவம் போல தமிழ்நாட்டில் அரசு உதவி பெறாமல் சாமானியர்களை எப்படி ஈர்த்தது, எப்படியெல்லாம் சாதிய நிறுவனத்திற்கு வாழைந்துகொடுத்து தன்னை காத்து கொண்டது, ராமானுஜர் போன்ற ஞானிகள் அந்த மதத்தை எப்படியெல்லாம் நிலை நிறுத்தினர், அனைத்து மக்களையும், முக்கியமாக தன்னை ஒரு நாட்டார் வழக்கியல் பிரிவோடு இணைத்து கொண்ட மதமாக வைணவம் எப்படி செயல்பட்டது என்றெல்லாம் பல நிகழ்கால செய்திகளை கொண்ட புரியவைக்கிறார்.
பார்ப்பனர் என்பர் யார்? அந்த பெயருக்கானா அர்த்தம் என்ன? அவர்கள் வருகைக்கு முன்பு இங்கு பூஜித்தவர்கள் யார்? இளையர் பார்ப்பனர் என்றால் அவர்களின் மூத்தவர் யார்? பறையரும் பார்ப்பனரும் ஒரு தொழில் புரிந்தவர்கள் என்பதற்கு இன்றும் பல திருவிழாக்களில் பறையர் சமூக மக்களுக்கு கொடுக்கப்படும் மரியாதை அடையாலமாக எஞ்ஜி இருக்கிறது, எனில் அவர்கள் இடத்தை பார்ப்பனர் பிடித்தது எப்படி? இப்படி கேள்விகள் நீள அழகான விளக்கங்கள் தரப்பட்டிருக்கிறது
1939ல் அரிசன ஆலய பிரவேசம் நடக்கிறது, இதற்கு காரணம் காந்தி அதை எதிர்த்தவர் அம்பேத்கர், சொல்லும் பொழுதே வினோதமாய் இருக்கிறதல்லவா, ஆமாம் மதுரையில் வைத்தியநாத அய்யர் நடத்திய அரிசன ஆலய நுழைவுக்கும் பூனா ஒப்பந்ததிற்கும் உள்ள தொடர்பை இந்த பகுதியில் ஆசிரியர் விளக்குகிறார், பட்டர்பிளை எபெக்ட் என்று ஆங்கிலத்தில் சொல்வதுண்டு, அதாவது எங்கோ நடக்கும் சிறு விஷயம் இன்னொரு இடத்தில் நடக்கும் பெரிய மாற்றத்திற்கு காரணம் ஆகும், இதுவும் அப்படியே, அம்பேத்கார் ஆலய நுழைவு எனக்கு இப்போது அவசியமற்றது, எங்கள் மக்கள் முதலில் படிக்கட்டும், நல்ல வேளையில் அமரட்டும் ஆலய நுழைவு தானாய் நடக்கும் என்று காந்தியின் ஆலய நுழைவு போராட்டத்திற்கு மறுப்பு தெரிவிக்கிறார், அதே சமயம் ராஜாஜி தன்னுடைய ஆதரவாலரான வைத்தியநாத அய்யரை கொண்டு மதுரையில் ஆலய நுழைவு போராட்டம் நடத்திக்காட்டுகிறார், இவைகள் ஒன்றோடுன்று தொடர்பு கொண்ட காங்கிரஸ்ஸின் சித்து விளையாட்டுக்கள், காந்தியின் பூனா ஒப்பந்ததை மறைக்க செய்த முயற்சிகள், இன்னும் இதைப்பற்றி பலவிளக்கங்களும் அதானல் மதுரையில் நடந்த வினோத சம்பவங்களையும் ஆசிரியர் விளக்கி இருக்கிறார்...
இன்னும் நமது சமூகத்தை தெரிந்துகொள்ள இதை போன்ற புத்தகங்கள் அவசியம் ஆகிறது.. இவைகள் தான் நாம் யார் என்கிற அடையாளத்தை நமக்கு கொடிட்டு காட்டுகிறது.
புத்தகம் : பண்பாட்டு அசைவுகள்
ஆசிரியர் : தொ. ப
பக்கங்கள் : 208
விலை : 75
No comments:
Post a Comment