Saturday, 29 October 2022

தேசாந்திரி - புத்தக பார்வை

100/100

#NaanVijay

நான் விஜய் 

உலகம் முழுக்க சுற்றி வரவேண்டும் என்பது பலபேரின் கனவு, சிறுவயதில் ஜாக்கி சான் நடித்த அரௌண்ட் த வேர்ல்ட் என்ற திரைப்படம் எப்படி பட்ட ஈர்ப்பை ஏற்படுத்தியது என்று வார்த்தைகளால் விளக்க முடியாது, இன்றும் ஜீன்ஸ் என்ற திரைப்படத்தில் 7உலக அதிசயமும், கடைசியில் வந்த டைனாசூரும் தான் மனதில் ஆழ நின்றயிருக்கிறது, பயணங்கள் தான் உலகின் பெரிய மாற்றங்களை, போர்களை, கொடூரங்களை,  நம்பிக்கைகளை, வாழ்க்கையை தந்திருக்கிறது என்று அறுதியிட்டு கூறுபவன் நான், நீங்கள் எவ்வளவு பயணம் செய்கிறீர்களோ அவ்வளவாய் வாழ்ந்திருக்கிறீர்கள், புத்தகங்களும், பயணங்களும் மட்டுமே உலகை மனிதனுக்கானதாய் மாற்றுகிறது, அந்த நம்பிக்கையை மீண்டும் ஒருமுறை உறுதிப்படுத்திக்கொண்டேன் இந்த புத்தகத்தின் மூலம்.. 

ஒரு பயணம் என்பது புகைப்படம் எடுக்க மட்டுமல்ல, பல நாட்கள் என் நண்பர்கள் ஒரு பகுதிக்கு சென்றதும் கேமரா ஓன் செய்து முன்னாடி நின்று அந்த இயற்கையை கொஞ்சமாய் படம் பிடித்துவிட்டு அங்கிருந்து நகர்வர், அதை முற்றுமாய் வெறுப்பவன் நான், நின்று நிதானித்து ரசிக்கவே பயணங்கள், ஒரு பயணம் அந்த இடத்தை பற்றியது மட்டுமல்ல அது ஒரு வாழ்வியலை பற்றியது, அங்கிருக்கும் ஒரு உலகம் ஒரு வியப்பு அதை புரிந்துகொள்ளுதல் அவசியம் ஆகிறது... 

ஒரு இடத்தில் ஆசிரியர் சொல்கிறார் ஒவ்வொரு இடத்திற்கும் ஒவ்வொரு மேகங்கள் என்று எத்தனை உண்மை, மழைக்கால மேகம் கூட சென்னையில் ஒன்றாய் ஊட்டியில் ஒன்றாய், மும்பை ஒன்றாய் இருப்பதை நேராக பார்த்திருக்கிறேன், ஒவ்வொன்றும் ஒரு பிரம்மாண்டம் இயற்கையின் அதிரூபம்..
சில இடங்களில் பயணங்கள்  மனிதர்களை காட்டும், சில மனிதர்கள் பயணங்களை காட்டுவார்கள், இந்த புத்தகத்தின் ஒவ்வொரு பக்கமும் என் பயணங்களை நினைவு படுத்தியது, ஆசிரியர் போல இந்தியாவை குறுக்கும் மருக்குமாய் நான் அலைந்தது இல்லை, ஆனால் என் வரையில் சில பயணங்கள் கொடுத்த அனுபவங்களை இங்கே ஏக்கதோடு திரும்பி பார்த்துக்கொள்கிறேன்,

ஒரு பயணம் கலை சார்ந்தோ எதோ ஒரு நோக்கம் சார்ந்தோ கூட இருக்கலாம், ஆனால் அதில் நீங்கள் இதை பெற்றுக்கொள்ள போகிறீர்கள் என்பது பயணம் தான் முடிவு செய்யும், சிற்பங்களை, ஓவியங்களை பார்க்க சென்ற ஆசிரியருக்கு பயணம் அறிமுக படுத்தியது டீ கடை நடத்தும் ஒரு வயதானவரை, பஸ் ஸ்டாண்டில் உடல் நலமற்று கிடந்தவரை சரி செய்த அந்த நல்ல உள்ளத்தை அந்த சிற்பங்களும், ஓவியங்களும் மறைக்க முடியவில்லை, அந்த பயணம் அந்த நல்ல மனிதரை ஆசிரியர்க்கு அறிமுகபடுத்தி இருக்கிறது... இப்படி ஒரு பயணம் அது தரும் அனுபவத்தை அதன் முடிவில் மட்டும்தான் அவதாணிக்க முடியும், சில முடிவுகளை பயணங்கள் தான் எடுக்கும்,  இவைகள் தான் என் பயணங்களும் இந்த புத்தகமும் எனக்கு சொல்லி கொடுத்தவை

இறுதியில் ஆசிரியர் சொல்லி இருப்பார் எல்லா பயணங்களும் என் வீட்டில் வாசலில் இருந்துதான் உலகம் தொடங்குகிறது என்பதை காட்டுவாதாக எத்தனை சத்தியமான வார்த்தை, பல நாட்கள், மும்பையிலும், அஹமடாபாத் இருந்து மீண்டும் சென்னை திரும்பும் போது சென்னை உங்களை வரவேற்கிறது என்கிற வார்த்தை பலகை மனதுக்கு தரும் ஒரு நிம்மதி எப்படிபட்டது என்றால், பல நாள் தாயை பிரிந்த கன்று மீண்டு சந்திக்கும் போது ஒரு ஏக்க ஓசை எழுப்பும், ஒவ்வொருமுறை சென்னையை சில நாட்கள் கழித்து பார்க்கும் போது என் மனம் அதே ப்ரேமையில் சிக்கி கொண்டிருந்ததை ஒவ்வொருமுறையும் உணர்ந்திருகிறேன், இல்லம் வருவதும் பயணத்தின் ஒரு பகுதிதான் ஆனால் எந்த முறையும் அது எனக்கு வேறொரு உணர்வை கொடுத்ததில்லை, ஒவ்வொருமுறையும் என்னை ஏற்றுக்கொள்ளும் இல்லம் ஒரு தாய் மடியாகவே அரவனைக்கிறது..

நிற்பதுவே, நடப்பதுவே, பறப்பதுவே...!
நீங்களெல்லாம் சொப்பனம் தானோ?
 மன காட்சி பிழைதானோ..?

மகாகவி பாரதி

புத்தகம் : தேசாந்திரி
ஆசிரியர் : எஸ். ரா
பக்கங்கள் : 257
விலை : 275
பதிப்பகம் : தேசாந்திரி

No comments:

Post a Comment